மும்பை: காரால் மோதி, ஏடிஎம் இயந்திரத்தைத் தகர்த்து, பணத்தைக் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், பீட் மாவட்டத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
எலம்பகட்டா பகுதியில் உள்ள மகாராஷ்டிர வங்கிக் கிளையில் இம்மாதம் 6ஆம் தேதி விடிகாலை 3 மணியளவில் இக்கொள்ளை முயற்சி இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
கொள்ளையர்களின் முயற்சி குறித்த காணொளி கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகியுள்ளது.
முகமூடி அணிந்த கொள்ளையர் இருவர் தங்களது காரால் மோதி ஏடிஎம் இயந்திரத்தைத் தகர்த்தனர். ஆயினும், அவர்களின் கொள்ளை முயற்சி ஈடேறவில்லை.
நிகழ்விடத்திற்குக் காவல்துறை வந்ததை அடுத்து, அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடினர்.
கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான காணொளியின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிந்து, கொள்ளையர்களைத் தேடும் பணியில் இறங்கியுள்ளது.
‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ படத்திலும் இதுபோன்றதொரு காட்சி இடம்பெற்றிருக்கும். அதனைக் கண்டபின் கொள்ளையர்கள் இத்தகைய முயற்சியில் இறங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.