புதுடெல்லி: சென்னை, டெல்லி உள்ளிட்ட ஏழு இந்திய விமான நிலையங்களுக்கும் விமானங்களுக்கும் மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர், லக்னோ, மும்பை, சண்டிகர், அகமதாபாத் ஆகியவை மற்ற ஐந்து விமான நிலையங்கள்.
அவ்விமான நிலையங்களின் இயக்குநர்களுக்கு புதன்கிழமை (டிசம்பர் 27) இரவு 10.20 மணியளவில் அந்த மிரட்டல் மின்னஞ்சல் வந்ததாக ஐஏஎன்எஸ் செய்தி தெரிவிக்கிறது.
அதிகாரபூர்வ வாடிக்கையாளர் சேவை அடையாளத்துடன் அந்த மிரட்டல் மின்னஞ்சல் வந்ததால் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர், உள்ளூர்க் காவல்துறையின் உதவியுடன் விசாரணையைத் தொடங்கினர். விமான நிலையத்திலும் தரையிறங்கிய விமானங்களிலும் அவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அவர்களது தேடுதல் வேட்டையில் இதுவரை சந்தேகப்படும்படியாக எந்த ஒரு பொருளும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது.
இருப்பினும், மிரட்டல் மின்னஞ்சல் தொடர்பில் தொழிலகப் பாதுகாப்புப் படை, ஜெய்ப்பூர் விமான நிலையக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
இதனிடையே, வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பியது யார் என்பதைக் கண்டுபிடிக்க விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.