புதுடெல்லி: குஜராத் மாநிலத்தின் எல்லையான ‘சர் கிரீக்’ பகுதியில் பாகிஸ்தானின் ராணுவக் கட்டமைப்பு காலூன்றி வருவதாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
குஜராத் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தை வலுப்படுத்தி, அதன் மூலம் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த முயற்சி செய்தால் தக்க பதிலடி தரப்படும் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கட்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய ராணுவத் தளத்தில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் சிறப்பு விருந்தினராக ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றினார்.
“பல ஆண்டுகளாக சர் கிரீக் எல்லைப் பகுதியில் பிரச்சினைகள் அவ்வப்போது தலைதூக்கி வருகின்றன. அதைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானுடன் இந்தியா பலமுறை பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முயற்சி மேற்கொண்டது. இருப்பினும், பாகிஸ்தானின் நோக்கம் தெளிவாக இல்லை. இந்நிலையில் அப்பகுதியில் பாகிஸ்தான் தனது ராணுவக் கட்டமைப்பை விரிவுபடுத்தி வருகிறது.
“இந்திய ராணுவமும், எல்லைப் பாதுகாப்புப் படையும் இணைந்து நாட்டின் எல்லைகளில் அண்டை நாட்டின் நடவடிக்கையை உன்னிப்பாகக் கவனித்து எல்லையைப் பாதுகாத்து வருகின்றன.
“சர் கிரீக் பகுதியிலிருந்து இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஏதேனும் நடவடிக்கைகளில் இறங்கினால், அதற்கு இதுவரை இல்லாத வகையில் தீர்க்கமான பதிலடி தரப்படும்,” என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.