திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் சத்தரை கூவம் ஆற்றில் பழங்காலத்தைச் சேர்ந்த மூன்று கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை அன்று ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் இந்த சிலைகளைக் கண்டறிந்து ஊர் மக்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
இந்தச் செய்தி பரவியதை அடுத்து சத்தரை, கடம்பத்தூர், மப்பேடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சிலைகளை ஆர்வத்துடன் நேரில் வந்து பார்த்தனர்.
இதுகுறித்துத் தகவல் அறிந்த திருவள்ளூர் வட்டாட்சியர் பாலாஜியின் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ஆற்றில் ஆங்காங்கே கிடந்த சுமார் மூன்று முதல் நான்கு அடி உயரம் கொண்ட அந்தப் பழங்காலக் கற்சிலைகளை அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டனர்.
மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தும் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள காப்பகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சிலைகள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை, அவற்றின் பெயர்கள் என்ன என்பது குறித்துத் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்த பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

