புதுடெல்லி: வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் மூன்றாண்டுகள் சிறை, அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2026ஆம் ஆண்டு மசோதாவின்படி, தேசியப் பாடலான ‘வந்தே மாதர’த்தைப் பாடும்போது வேண்டுமென்றே தடுப்பதாகவோ அல்லது இடையூறுகளை விளைவிப்பதாகவோ கண்டறியப்படும் எவருக்கும் மூன்றாண்டு சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இதுவரை தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலுக்கு அத்தகைய பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இருந்தது.
தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிக்கும் பட்சத்தில், அதைத் தடுக்க சட்டபூர்வ உத்தரவு ஏதும் இதுவரை இல்லை. தற்போது புதிய மசோதா மூலம் அத்தகைய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தேசியப் பாடலும் தேசிய கீதமும் பாடப்படும்போது அல்லது இசைக்கப்படும்போது, தேசியப் பாடலுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய உள்துறை அமைச்சு உத்தரவிட்டிருந்தது. மேலும், ‘வந்தே மாதரம்’ பாடலின் ஆறு பத்தியும் பாடப்பட வேண்டும். அவ்வாறு பாடப்படும்போது அனைவரும் நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று அந்த உத்தரவு மேலும் தெரிவித்தது.
பல்வேறு வழிகாட்டுதல்களைக் கொண்ட உள்துறை அமைச்சின் உத்தரவில் அனைத்துப் பள்ளிகளிலும் நாள்தோறும் மேற்கொள்ளும் பணிகளைத் தேசியப் பாடலை அனைவரும் இணைந்து பாடுவதன் மூலமே தொடங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

