புதுடெல்லி: திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திரப் பிரதேச அரசு அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவை மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேச முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இருந்தபோது, விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் அடங்கிய கலப்பட நெய்யை திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
மனுக்களை நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. அந்த வழக்கு வெள்ளிக்கிழமை (அக்டாபர் 4) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திரப் பிரதேச அரசு அமைத்துள்ள சிறப்பு விசாரணைக் குழுவை, மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதிய சிறப்பு விசாரணைக் குழு, 2 சிபிஐ அதிகாரிகள், 2 ஆந்திரப் பிரதேச காவல்துறை அதிகாரிகள், 1 இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையப் பிரதிநிதி ஆகியோரைக் கொண்டதாக இருக்கும் என அறிவித்த உச்ச நீதிமன்றம், குழுவை சிபிஐ இயக்குநர் கண்காணிப்பார் என்றும் உத்தரவிட்டுள்ளது.