சென்னை: எண்ணூர்க் கழிமுகத்துக்கு அருகே கொசஸ்தலையாற்றில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) டன் கணக்கிலான மீன்கள் செத்து மிதந்த நிலையில், தொழிற்சாலை ரசாயனக் கழிவுகள் ஆற்றில் கலந்ததால்தான் மீன்கள் இறந்திருக்கும் என மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இறந்த மீன்களை எண்ணூர்-தாழங்குப்பம் விரைவுச்சாலையில் கொட்டி, எண்ணூர்ப் பகுதி மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மணலி, எண்ணூர்ப் பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறைத் தொழிற்சாலைகள், தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதனால் இப்பகுதி வழியாகச் செல்லும் கொசஸ்தலையாறு, எண்ணூர்க் கழிமுகப் பகுதிகள் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.
கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கப் பகுதியாக விளங்கும் இந்தப் பகுதிகளில் கடல்வாழ் உயிரினங்கள் முற்றாக அழிந்து, சுற்றுச்சூழல் கெடும் நிலை ஏற்பட்டிருப்பதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் தங்களின் வாழ்வாதாரமே கொசஸ்தலையாறும், எண்ணூர்க் கழிமுகமும்தான் என்று கூறிய மீனவர்கள், “மீன்கள் இறந்ததற்கு இப்பகுதியைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகள்தான் காரணம். எனவே கொசஸ்தலையாறு மாசடையும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும். வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். விதிமீறலில் ஈடுபட்ட தொழிற்சாலைமீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று வலியுறுத்தினர்.
இதற்கிடையில் மாசுக்கட்டுப்பாடு வாரியம், மீன்வளத்துறை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் மீன்கள் இறந்து கிடந்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டு மீன் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். மேலும், முதற்கட்ட ஆய்வறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
“மீன்கள் இறந்த பகுதியில் எண்ணெய்க் கசிவோ தொழிற்சாலைக் கழிவுகளோ ஆற்றில் கலந்ததற்கான அறிகுறிகள் கண்டறியப்படவில்லை. இறந்த மீன் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். முடிவுகள் வந்த பிறகே மீன்கள் இறந்ததற்கான காரணம் தெரியவரும்,” என்று அவர்கள் கூறினர்.
இவ்வேளையில், பாமக தலைவர் அன்புமணி, “ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களை அகற்றி அப்பகுதியில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க வேண்டும்,” என்று தம் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில், “பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடி நிவாரணத்துடன் உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.


