பாட்னா: அரசு ஊழியர்களை உற்சாகப்படுத்தும் வகையில் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது பீகார் அரசு.
அதன்படி, அம்மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தங்களது குடும்பத்தாருடன் சுற்றுலா செல்வது கட்டாயமாக்கப்படுகிறது என்பதே அந்த உத்தரவாகும்.
இதுதொடர்பாக, பீகார் பொது நிர்வாகத்துறை வெளியிட்ட அறிவிப்பில், மாநிலத்தின் உள்ளூர் சுற்றுலா, உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அதிகாரிகளும் ஊழியர்களும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தங்களது சொந்த மாவட்டத்தைத் தவிர்த்து பீகாரில் உள்ள வேறு ஏதேனும் மாவட்டத்துக்கு தங்கள் குடும்பத்தாருடன் சென்று, அங்கு இரண்டு இரவுகள் தங்கும் வகையில் சுற்றுலாவுக்குத் திட்டமிட வேண்டும் என்று அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, வெள்ளி, சனி இரவுகளில் வெளியூர்களில் தங்கும் வகையில் இந்தச் சுற்றுலாவை மேற்கொள்ள வேண்டும் என்றும் தங்கியிருக்கும் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள குறைந்தபட்சம் மூன்று சுற்றுலாத்தலங்களையாவது நேரில் சென்று பார்வையிட வேண்டும் என்றும் அரசு உத்தரவில் குறிப்பிடபட்டுள்ளது.
பீகாரில் சுற்றுலாத்துறை மிகவும் பின்தங்கியுள்ளது. இதையடுத்து, அத்துறையின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் உள்ளூர் பொருளியலையும் வலுவாக்க முடியும் என அம்மாநில அரசு கருதுகிறது.
அங்குள்ள இயற்கை கிராமப்புற, சூழலியல் சுற்றுலா மையங்களை அரசு ஊழியர்களே முதலில் கண்டறிவதன் மூலம், அரசின் நோக்கம் விரைவில் நிறைவேறும் என அம்மாநில அரசு எதிர்பார்க்கிறது.

