புதுடெல்லி: வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக முன்னேற்றம் கண்டு வருவதாக இந்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடப்பாண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்துக்குள் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
“இந்தியா எதிர்கால வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்று இந்தியா வலிமையான நாடாக உருப்பெற்றுள்ளது. விவசாயம் போன்ற முக்கியமான துறைகளில் கவனம் செலுத்தப்படுகிறது. விதிமுறைகளைப் பின்பற்றியே, பிரிட்டன் உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது,” என்றார் திரு பியூஷ் கோயல்.
எதிர்காலத்திலும் நியூசிலாந்து, ஓமன், அமெரிக்கா அல்லது 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமாக இருந்தாலும் இந்தியாவின் ஒப்பந்தங்கள் நன்கு சிந்தித்து உத்தியுடன் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
“நவம்பர் மாத காலக்கெடுவிற்குள், பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதன் மூலம் ஒரு நல்ல ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்,” என்றார் அமைச்சர் பியூஷ் கோயல்.