புதுடெல்லி: டெல்லியில் பல்வேறு பகுதிகளில் அடர்ந்த மூடுபனியாலும் தூசுமூட்டத்தாலும் போக்குவரத்துச் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், அனைத்துலக விமான நிலையத்தின் விமான ஓடுபாதை மூடுபனியாலும் காற்றுத் தூய்மைக் கேட்டாலும் சூழப்பட்டிருந்தது. அதனால் அங்குத் தரையிறங்க வேண்டிய விமானங்கள் அருகேயுள்ள மற்ற விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் அங்கிருந்து புறப்பட வேண்டிய விமானச் சேவைகளிலும் சுணக்கம் ஏற்பட்டது.
டெல்லியின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமான நிலையில் பதிவானதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் ஆய்வு நிறுவனமான ஐக்யூஏர் (IQAir) மேற்கொண்ட நேரடி ஆய்வுக்குப் பின் மாசுபட்ட நகரங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இதுவரை ஆக மோசமான காற்றுத் தரக்குறியீட்டைக் கொண்டிருந்த பாகிஸ்தானின் லாகூரைப் பின்னுக்குத் தள்ளி, ஆபத்தான காற்றுத்தரத்தை டெல்லி கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் காற்றுத் தரக்குறீயிடு 1,000த்தைத் தாண்டினால் ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் வானிலை ஆய்வு நிலையமோ, காற்றுத் தரக்குறியீடு 350ஐ எட்டியுள்ளதாகவும் சில இடங்களில் காற்றுத்தரக் குறியீடு 100ஆகக் குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

