கர்நாடகா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், கடந்த ஆறு நாள்களாகக் காணாமல் போன கர்நாடகாவைச் சேர்ந்த 22 வயது சாகேத் சீனிவாசய்யா என்ற மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) இளங்கலைப் படிப்பை முடித்துவிட்டு, வேதியியல், உயிரி மூலக்கூறு பொறியியலில் முதுகலைப் பட்டம்பெற அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (பெர்க்லி) சாகேத் பயின்று வந்தார்.
கடந்த திங்கட்கிழமை (பிப்ரவரி 9) முதல் சாகேத் காணாமல் போனார். அவரது உடைமைகள், மடிக்கணினி ஆகியவை தனியாக ஓரிடத்தில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் அவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
ஆறு நாள்களாகத் தேடுதல் பணி நடைபெற்ற நிலையில், பெர்க்லி பகுதியில் உள்ள ‘அன்சா’ ஏரியில் சாகேத்தின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம் தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாணவரின் உடலை இந்தியாவுக்குக் கொண்டுவரத் தேவையான அனைத்து உதவிகளையும் தூதரகம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
மாணவரின் இறப்புக்கான காரணம் குறித்து கலிபோர்னியா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் அடுத்தடுத்து இந்திய மாணவர்கள் உயிரிழக்கும் நிகழ்வு, அங்குள்ள இந்தியச் சமூகத்தினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

