உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள், இணையத்தள விளையாட்டிற்கு அடிமையாகி கடந்த வாரம் ஒன்பதாவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரிய நாட்டு நாடகங்கள், இணையத்தள விளையாட்டுகள், சமூக வலைத்தளக் காணொளிகள் ஆகியவற்றில் சிறுமிகள் மூவரும் தீவிரமாக மூழ்கியிருந்ததாகத் தெரிகிறது.
அதனால் அவர்களின் தந்தை மகள்களிடமிருந்து கைப்பேசிகளைப் பறித்து வைத்துள்ளார்.
தங்களது விருப்பமான பொழுதுபோக்கிற்குத் தந்தை தடை விதித்ததால் ஆத்திரமடைந்த சிறுமிகள், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர்.
இது குறித்துக் கண்ணீர் மல்கப் பேசிய அவர்களின் தந்தை, குழந்தைகளின் நலன் கருதி கைப்பேசியைப் பிடுங்கி வைத்தது ஒரு குற்றமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவ்வாறு செய்தது பாவமா என்று அவர் உருக்கமாகக் கேட்டது பார்ப்போரை நெகிழச் செய்துள்ளது.
இணையப் பயன்பாடு தற்காலச் சிறுவர்களிடம் எத்தகைய மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதற்கு அந்தச் சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது.

