மும்பை: பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு மும்பையில் உள்ள புலேஷ்வர் பகுதியில் நடைபெற்ற ஊர்வலத்தின்போது 22 அடி உயரப் பிள்ளையார் சிலை திடீரெனச் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 22) இரவு சுமார் 9:50 மணியளவில் அந்த ஊர்வலம் நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
பலராம் மெர்ச்சன்ட் சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் சங்கேத் நெவ்சே (33), பிரிஜேஷ் ஹேமந்த் ஜோஷி (30) ஆகிய இருவரும் சிலைக்குக் கீழே சிக்கிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காயமடைந்த ஐந்து பேரில், இரண்டு சிறுமிகளும் அடங்குவர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் வழக்கம்போல் பிள்ளையார் சதுர்த்தி விழா விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், விபத்துச் சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


