பாட்னா: பீகார் மாநிலத்தில் உள்ள சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் குரங்குகளின் சண்டையால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை ரயில் நிலையத்தில் உள்ள நான்காவது நடைமேடையில் இரண்டு குரங்குகள் சண்டை போட்டுக்கொண்டிருந்தன. அப்போது ஒரு குரங்கு மீது மற்றொரு குரங்கு ரப்பர் போன்ற ஒரு பொருளைத் தூக்கி வீசியது. அந்தப் பொருள் அங்குள்ள மின்சாரம் செல்லும் கம்பியில் உரசி தீப்பிடித்தது.
பின்னர் அந்தக் கம்பி அறுந்து அங்கு நின்று கொண்டிருந்த ரயில் மீது விழுந்தது. இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் அறுந்து விழுந்த மின்சாரக் கம்பியைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு மேல் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். அங்கு குரங்குகளால் தாக்கப்பட்டு சிலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த புகார்கள் வரும்போது வனத்துறையினர் விரைந்து வந்து குரங்குகளைப் பிடித்துச் செல்கின்றனர். ஆனால், குரங்குகள் மீண்டும் மீண்டும் ரயில் நிலையத்திற்கு வந்து தொல்லை தருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.
குரங்குகளின் சண்டையால் ரயில் சேவை பாதிக்கப்பட்ட சம்பவம் பீகார் மாநிலத்தில் பரபரப்பாக பேசக்கூடிய செய்தியாக மாறியுள்ளது.

