மும்பை: மகாராஷ்டிர மாநில அரசியல் நகைச்சுவைக் கலைஞர் குணால் கம்ராவை காவல்துறை விசாரணைக்கு அழைத்துள்ளது.
துணை முதல்வரும் சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என விமர்சனம் செய்தது குறித்து குணாலிடம் கார் என்னும் பகுதியைச் சேர்ந்த காவல்துறை விசாரணை நடத்துகிறது.
பிப்ரவரி மாதம் மும்பை ஹேபிடட் ஸ்டுடியோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குணால் விமர்சனம் செய்திருந்தார்.
அந்த விமர்சனம் அடங்கிய காணொளி அண்மையில் வெளியானது. குணாலின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதால் அவரது பேச்சுக்கு சிவசேனா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
“தனது கீழ்த்தரமான நகைச்சுவைக்காக குணால் கம்ரா மன்னிப்புக் கேட்க வேண்டும்,” என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, குணால் கம்ரா நிகழ்ச்சி நடத்திய ஹேபிடட் ஸ்டுடியோ மீது ஷிண்டேவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி, அதைச் சேதப்படுத்தினர்.
அது தொடர்பாக சிவசேனா கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், தனது மவுனத்தைக் கலைத்த ஏக்நாத் ஷிண்டே, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அதில், “இங்கே கருத்துச் சுதந்திரம் உள்ளது. நகைச்சுவையை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அதற்கு ஓர் எல்லை உண்டு.
“ஒருவருக்கு எதிராகப் பேச அந்த நகைச்சுவைக்கலைஞர் ஒப்பந்தம் செய்து கொண்டது போலத் தெரிகிறது. அவர் என்னைப் பற்றி மட்டும் இல்லை, நமது பிரதமர், உச்ச நீதிமன்றம், பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் சில தொழிலதிபர்களைப் பற்றியும் கேலி செய்துள்ளார்.
“இதைக் கருத்துச் சுதந்திரம் எனக் கூறமுடியாது. யாருக்காகவோ அவர் வேலை செய்வதுபோல இருந்தது,” என்று தெரிவித்துள்ளார்.
“அந்த நபர் (குணால்) தனக்கு ஓர் எல்லையை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் வினைகள் எதிர்வினைகளை ஏற்படுத்தும்,,” என்று ஸ்டுடியோ தாக்குதலை ஷிண்டே நியாயப்படுத்தி உள்ளார்.
இதனிடையே, தனது துரோகி என்ற பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள குணால் கம்ரா, “கருத்துச் சுதந்திரம் என்பது அதிகாரத்தில் இருப்பவர்களை புகழ்வது மட்டுமே என்று சுருங்கி விடக்கூடாது. எனது பேச்சுக்காக நான் மன்னிப்புக் கேட்கப்போவதில்லை. எந்த ஒரு சட்டப்பூர்வமான நடவடிக்கைக்கும் காவல்துறையுடன் ஒத்துழைக்கத் தயார்,” என்று கூறியுள்ளார்.