புதுடெல்லி: பிரபல குண்டர் கும்பல் தலைவன் தாவூத் இப்ராஹிம்மின் கூட்டாளிகளில் ஒருவரான சலீம் டோலாவை துருக்கிக் காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) அதிகாலை அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் அவர் பல்வேறு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
தற்போது டெல்லியில் பலத்த காவலில் வைக்கப்பட்டுள்ள சலீம் டோலா, விரைவில் மும்பை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.
பல்வேறு குற்றங்களுக்காக இந்தியாவில் தேடப்பட்டு வந்த சலீம் டோலா, கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடிற்குத் தப்பியோடிவிட்டார். பின்னர் அவர் இந்தியாவுக்கு வெளியே இருந்தபடி, பன்னாட்டுப் போதைப்பொருள் வலையமைப்பை நடத்தி வந்தார்.
இதற்கிடையே, மும்பையைச் சேர்ந்த ஃபைசல் ஜாவேத் ஷேக் என்பவரும் அவரது மனைவியும் போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது போதைப்பொருள் விவகாரத்தில் சலீம் டோலாவின் பங்கு குறித்து காவல்துறைக்குத் தெரியவந்தது.
சலீம் டோலாவின் போதைப்பொருள் விநியோகச் சங்கிலியானது, மகாராஷ்டிராவின் சூரத் நகரில் இருந்து ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், துருக்கி வரை நீண்டிருப்பதும் கண்டறியப்பட்டது.
கடந்த ஆண்டு இந்தியத் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர முயற்சிகளின் காரணமாக, சலீம் டோலாவின் மகன் தாஹிர், மருமகன் முஸ்தபா முகமது ஆகியோரும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். இதன் மூலம் டோலாவின் போதைப்பொருள் விநியோக அமைப்பு பலவீனம் அடைந்தது.
இந்நிலையில், துருக்கி காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின்போது சலீம் டோலா கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

