குருகிராம்: இணையம் வழியாகப் பலரையும் ஏமாற்றி ரூ.10.24 கோடி சுருட்டிய இருவரை குருகிராம் காவல்துறை கைதுசெய்தது.
அசுதோஷ், உத்கர்ஷ் என்ற அவ்விருவர்மீது இந்தியா முழுவதும் 2,702 புகார்கள் வந்திருப்பதாகக் கூறப்பட்டது.
அவர்களிடமிருந்து இரண்டு கைப்பேசிகளும் மூன்று ‘சிம்’ அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றில் சேமிக்கப்பட்டிருந்த தரவுகளை ஆராய்ந்தபோது, நாடு முழுவதும் இடம்பெற்ற பல மோசடிகளில் அவ்விருவருக்கும் தொடர்பிருப்பதைக் காவல்துறை கண்டுபிடித்தது. அவர்கள்மீது இதுவரை 142 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தெரிவித்தது.
அவற்றில் ஒன்பது வழக்குகள் ஹரியானா மாநிலத்தில் பதியப்பட்டுள்ளன. எஞ்சியவை விசாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.
“இன்ஸ்டகிராமில் போலிக் கணக்கு, வேலை பெற்றுத் தருவதாகப் பொய் உறுதிமொழி, மின்வணிகத் தளங்களில் பொருள் வாங்கி விற்றல், யூடியூப் தளத்தில் காணொளிகளுக்கு விருப்பக்குறியிடுதல் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்பன போன்ற வழிகளில் அவர்கள் பலரையும் ஏமாற்றியுள்ளனர்,” என்று காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.