கோல்கத்தா: கோல்கத்தாவில் இயங்கிவந்த இரு போலி அழைப்பு நிலையங்களைக் காவல்துறை கண்டுபிடித்தது. அதன் தொடர்பில், 16 பேரைக் கைது செய்துள்ளதாகக் காவல்துறை அதிகாரிகள் வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 24) தெரிவித்தனர்.
கோல்கத்தாவின் செலிம்பூரில் உள்ள அழைப்பு நிலையம் ஒன்றிலும் பெஹாலாவில் செயல்பட்டுவந்த இரு அழைப்பு நிலையங்களிலும் ஏப்ரல் 22ஆம் தேதி இரவு அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர்.
அப்போது அவை போலி அழைப்பு நிலையங்கள் என்பது தெரியவந்தது.
அங்கிருந்து பல கைப்பேசிகள், கணினிகள், மடிக்கணினிகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், அந்தப் போலி அழைப்பு நிலையங்கள் மூலம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்களைத் தொழில்நுட்ப உதவி என்ற பெயரில் தொடா்பு கொண்டு அவர்களை மிரட்டிப் பெரும் தொகையை வசூலித்துள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டது.
இவர்களுக்குத் தேசிய, அனைத்துலக மோசடிக் கும்பலுடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கோல்கத்தா காவல்துறையினர் கூறினர்.