புதுடெல்லி: இன்னும் சில மாதங்களில், டாடா குழுமத்தின்கீழ் ‘ஏர் இந்தியா’ நிறுவனமும் ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ நிறுவனமும் வரவுள்ளன. அதற்கான ஆயத்தப் பணிகளை டாடா குழுமம் மேற்கொண்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.
‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ நிறுவனம் விரைவில் ‘ஏர் இந்தியா’ நிறுவனத்துடன் ஒரு குறியீட்டுப் பகிர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவ்விரு விமான நிறுவனமும் வெவ்வேறு வழித்தடங்களில் இயங்கும் எனவும் இந்தத் திட்டம் அந்நிறுவனங்கள் வணிக ரீதியில் வளர உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அவ்விரு நிறுவனங்களின் இணைப்புக்குப் பிறகு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்நாட்டில் இருக்கும் சிறிய நகரங்களுக்கிடையே இயங்கும் எனவும் நீண்ட தூர அனைத்துலகப் பயணத்திற்கு ஏர் இந்தியாவைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அண்மையில் ஏர் இந்தியா தனது புதிய வணிக முத்திரையை வெளியிட்டது. டாடா குழுமம் தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரசுக்கும் புதிய வணிக முத்திரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் அவ்விரு நிறுவனத்தின் இணைப்பு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.