சண்டிகர்: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த இருவரை, பஞ்சாப் காவல்துறை கைது செய்தது. அவர்களிடம் இருந்து இரண்டு கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.
பஞ்சாப் மாநிலத்தில் பெரிய அளவில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்த இருவரும் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
கைதான இருவரும் குர்தாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தடை செய்யப்பட்ட பப்பர் கல்சா இண்டர்நேஷனல் என்ற காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் காவல்துறை தெரிவித்தது.
மேலும், இருவரும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் இணைந்து பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நாச வேலைகளை நிகழ்த்த திட்டமிட்டிருந்தது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
இருவர் மீதும் ஏற்கெனவே சில குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்திய உளவுப் பிரிவு அளித்த தகவல்களின் உதவியோடு, மாநில உளவுத்துறையினரும் காவல்துறையினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது இருவரும் பிடிபட்டனர்.
அவர்களிடம் இருந்து வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள், இரு கையெறி குண்டுகள், தொலைத்தொடர்பு கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அண்மையில்தான் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் மூன்று பேர் பஞ்சாப்பில் துப்பாக்கிகளுடன் கைதாகினர். தற்போது மேலும் இருவர் சிக்கி இருப்பதால் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

