கோவை: தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட தங்கம், ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மொத்தம் ரூ.70 லட்சம் பணமும், 200 கிராம் தங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் கோவை காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்தன.
இதையடுத்து, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களின் எல்லையோரப் பகுதிகளில் காவல்துறையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினர்.
ஆங்காங்கே மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கையின்போது, மூட்டை மூட்டையாக போதைப் பொருள்கள் சிக்கி வருகின்றன.
இந்நிலையில், கோவை, கேரளா இடையே சென்று வரும் வாகனங்களை இருமாநில காவல்துறையினரும் சோதனையிட்டு வருகின்றனர்.
திங்கள்கிழமை (மே 19) கேரள எல்லையான வேலந்தாவளம் பகுதியில் பாலக்காடு மாவட்ட காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கோவையில் இருந்து கேரளா நோக்கிச் சென்ற சந்தேகத்துக்குரிய இருசக்கர வாகனத்தைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அதில் வந்த இருவரிடம் விசாரணை நடத்தியபோது சந்தேகம் வலுத்தது. இருவரையும் சோதனையிட்டபோது, கடத்தலுக்கு வசதியாக பிரத்யேக உடையை அணிந்திருப்பது தெரியவந்தது.
அந்தச் சட்டையில் பல்வேறு அடுக்குகள் இருப்பதும் அதில் ரொக்கப் பணமும் தங்கமும் மறைத்து வைக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், அவ்விரு ஆடவர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஹவாலா பணமாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.