ராஜஸ்தானில் உள்ள ஒரு மாதின் வீட்டுச் சுவர்மீது இரண்டு குரங்குகள் ஏறி, அவரின் முடியைப் பிடித்து இழுப்பதைக் காட்டும் காணொளி இணையத்தில் வலம் வருகிறது.
காய்கறிகளுடன் காணப்படும் அந்த மாதின் முடியை குரங்குகளில் ஒன்று பிடித்து இழுத்தது. அதன் பிறகு அந்தக் குரங்கு முடியை விட்டது.
இருப்பினும், இரண்டாவது குரங்கு திடீரெனத் தோன்றி, அந்த மாதின் முடியை இறுக்கப் பிடித்து இழுத்தது.
கைகளில் வைத்திருந்த காய்கறிகளைக் கீழே போட்ட அந்த மாது, நாற்காலியிலிருந்து குதித்தார். அதன் பிறகு, அவரது கணவர் என்று நம்பப்படும் ஓர் ஆடவர் அந்தக் குரங்குகளைத் துரத்தி அடித்தார்.
இன்ஸ்டகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்தக் காணொளிக்கு 118,300 ‘லைக்ஸ்’ கிடைத்துள்ளன.
ராஜஸ்தானின் அஜ்மர் நகரில் அந்தச் சம்பவம் நடந்தது. இருப்பினும், அது எப்போது நடந்தது என்று தெளிவாகத் தெரியவில்லை.
மொத்தச் சம்பவமும் 10 விநாடிகளுக்குக் குறைவான நேரம் நீடித்தது.
சம்பவம் குறித்து பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குரங்குகளுடன் நடக்கும் சம்பவங்கள் கடுமையாக எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு ஃபிப்ரவரி மாதம், உத்தரப் பிரதேசத்தில் குரங்குகளிடமிருந்து தப்பிப்பதற்காக ஓடிய 15 வயது சிறுமியும் அவளது சகோதரியும் கிணற்றில் விழுந்தனர்.
அந்த 15 வயது சிறுமி உயிரிழந்ததாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ தெரிவித்தது.

