மும்பை: இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் இயங்கும் ‘இண்டோ அமின்ஸ்’ வேதிப்பொருள் தயாரிப்பு ஆலையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) நிகழ்ந்த வாயுக்கசிவால் இருவர் உயிரிழந்ததாக அந்நிறுவனம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) தகவல் வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் ஒருவர் அந்த நிறுவனத்தின் ஊழியர். அருகிலுள்ள வேறு ஒரு தொழிற்பிரிவில் பணியாற்றிய மற்றொருவர் மருத்துவச் சிகிச்சையின்போது மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
வாயுக்கசிவு ஏற்பட்டதற்கான தெளிவான காரணமும் சூழலும் இன்னும் கண்டறியப்படவில்லை. விபத்தைத் தொடர்ந்து அந்தத் தொழிற்சாலையின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்தச் சம்பவம் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டுவரும் வேளையில், தங்களின் வர்த்தகச் செயல்பாடுகளில் பெரிதாகப் பாதிப்பு இருக்காது என்று இண்டோ அமின்ஸ் நிறுவனம் எதிர்பார்க்கிறது.
இதனிடையே, திங்கட்கிழமை அந்நிறுவனத்தின் பங்கு விலை 4.6 விழுக்காடு வரை சரிந்து, 124.02 ரூபாய் ஆனது. வர்த்தக முடிவில் பங்குகளின் மதிப்பு 3.9 விழுக்காடு குறைந்து காணப்பட்டது.


