புதுடெல்லி: வேளாண் வளர்ச்சிக்கான அனைத்துலக நிதியம் (ஐஎஃப்ஏடி), இந்திய வேளாண் துறை சார்ந்த புதுத் தொழில் நிறுவனங்களில் (ஸ்டார்ட் அப்) முதலீடு செய்ய முன்வந்துள்ளது.
ஐநா மன்றத்தின்கீழ் செயல்படும் இந்த அமைப்பு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவுடன் ஐந்து ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1977ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் ‘ஐஎஃப்ஏடி’ நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் 200க்கும் மேற்பட்ட வேளாண் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது.
இந்த அமைப்பின் தலைமையகம் இத்தாலியின் ரோம் நகரில் உள்ளது. பின்தங்கிய, வளரும் நாடுகளில் வறுமையை ஒழிப்பது இந்த அமைப்பின் முக்கியமான நோக்கங்களில் ஒன்றாகும்.
இந்நிலையில், இந்திய வேளாண் துறையில் இந்த அமைப்பு முதலீடு செய்வது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
2026 முதல் 2033 வரையிலான காலகட்டத்தில் தனது திட்டங்களைச் செயல்படுத்த இருப்பதாக இந்த அமைப்பின் துணைத் தலைவர் டோனால் பிரவுன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள அரசு, தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்பட இருப்பதாகவும் முதற்கட்டமாக வேளாண் துறை சார்ந்த ஐந்து இந்திய புதுத்தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும் பிடிஐ செய்தி முகமையிடம் அவர் கூறியுள்ளார்.
110 லட்சிய மாவட்டங்கள் என்ற திட்டத்தில் பங்கேற்க இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், சிறு விவசாயிகளுக்காக இந்தியக் கிராமங்களில் தானிய சேமிப்புக் கிடங்குகள், உணவு பதப்படுத்தும் கூடங்களை அமைத்து, சந்தை வாய்ப்புகள் உறுதிசெய்யப்படும் என்றார்.

