புதுடெல்லி: யுனெஸ்கோ உலக மரபுடைமை அமைப்பின் உணர மட்டுமே முடியும் கலாசார மரபைப் பாதுகாப்பதற்கான அரசாங்கங்கள் நிலைக் குழுவின் (Intergovernmental Committee for the Safeguarding of the Intangible Cultural Heritage) 20வது சந்திப்பு இந்தியாவில் நடைபெறவுள்ளது.
முதன்முறையாக இந்தியாவில் நடைபெறும் இந்தச் சந்திப்பு வரும் டிசம்பர் மாதம் எட்டாம் தேதியிலிருந்து 13ஆம் தேதி வரை டெல்லியின் செஞ்சதுக்கத்தில் (Red Fort) நடக்கும் என்று தகவல் தெரிந்தவர்கள் கூறியுள்ளனர். உலக நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் அதிகமான பேராளர்கள் இச்சந்திப்பில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
யுனெஸ்கோவுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் விஷால் வி ஷர்மா இந்தச் சந்திப்புக்குத் தலைமை தாங்குவார். யுனெஸ்கோவிடம் இந்தியா சமர்ப்பித்துள்ள கலாசார அம்சங்களான தீபாவளி, சத் மகாபர்வா ஆகியவற்றின் மீது சந்திப்பு கவனம் செலுத்தும்.
யுனெஸ்கோவின் இந்தச் சந்திப்பு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. மனித குலத்தின் உணர மட்டுமே முடியும் கலாசார அம்சங்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளுமாறு கோரி உறுப்பு நாடுகள் சமர்ப்பிக்கும் அம்சங்கள் இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டு வருகிறது.

