மேற்கு வங்கத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்: முதல்வர் சுவேந்து அதிகாரி

மேற்கு வங்கத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்: முதல்வர் சுவேந்து அதிகாரி

2 mins read
5a1ce37c-a142-4eda-bdbd-bc60b1d5d6ac
மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி. - கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

கோல்கத்தா: குஜராத், உத்தராகண்ட், அசாம் மாநிலங்களில் பின்பற்றப்பட்ட அதே நடைமுறையைப் பின்பற்றி மேற்கு வங்கத்திலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

கோல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி, “மேற்கு வங்கத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். இதற்கென ஒரு குறிப்பிட்ட நடைமுறை உள்ளது. அதை சட்டப்பேரவையில் நான் விளக்குவேன். ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையின் கீழ் ஒரு குழு அமைக்கப்படும். குஜராத், உத்தராகண்ட், அசாம் மாநிலங்களில் பின்பற்றப்பட்ட அதே நடைமுறையைப் பின்பற்றி பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்,” என்றார்.

மம்தா பானர்ஜி தலைமையிலான முந்தைய அரசில் ஊழலும், வாரிசு அரசியலும்தான் மேற்கு வங்கத்தின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்டன. இதன் காரணமாக மாநிலம் பின்தங்கிய நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. ரவீந்திரநாத் தாகூர், பங்கிம் சந்திரர் போன்ற ஆளுமைகளின் பாரம்பரியத்தை முன்னிறுத்துவது அவர்களின் செயல்திட்டமாக இருக்கவில்லை.

இப்போது ஒரு தேசியவாத அரசு ஆட்சியில் உள்ளது. எனவே, இத்தகைய பணிகள் அனைத்தும் முன்னெடுக்கப்படும். இந்த ஆண்டு வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டாகும். இதற்காக பட்ஜெட்டில் ஒரு முக்கிய முன்னெடுப்பை நாங்கள் அறிவித்துள்ளோம். வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டைக் குறிக்கும் வகையில், தேசிய அளவிலான அரும்பொருளகம் ஒன்றை அமைப்பது குறித்து அறிவிக்க உள்ளோம்,” என தெரிவித்தார்.

நம் நாட்​டில் பொது சிவில் சட்​டம் தற்​போது கோவா, உத்தராகண்ட், குஜ​ராத், அசாம் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் அதி​கார​பூர்​வ​மாக நடை​முறை​யில் உள்​ளது அல்லது சட்​ட​மாக இயற்​றப்​பட்​டுள்​ளது. இதில் சில மாநிலங்​கள் ஏற்​கெனவே சட்​டத்தை அமல்​படுத்​தி விட்ட நிலை​யில், மற்றவை அதற்​கான இறுதிக்கட்​டப்​ பணி​களை மேற்​கொண்டு வருகின்றன. மகா​ராஷ்டி​ரா​விலும் பொது சிவில் சட்​டத்​தைக் கொண்டு வர அந்த மாநில அரசு திட்டமிட்​டுள்​ளது.

குறிப்புச் சொற்கள்
மம்தா பானர்ஜிவாரிசுநீதிபதிஅடையாளம்