புதுடெல்லி: எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியாவின் பதிலடி கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பில், இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்றும் பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாத அமைப்புகளைப் பாதுகாப்பது மட்டுமன்றி அவற்றுடன் இணைந்து நெருக்கமாகச் செயல்படுகிறது என்றும் திரு ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
கார்கில் போரின் வெற்றி நாள் காஷ்மீரின் லடாக் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) கொண்டாடப்பட்டது.
அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை என்று ஒன்று நடந்தால் அது பாகிஸ்தான் ஆட்சிக்கு உட்பட்ட காஷ்மீர் பற்றியதாக மட்டுமே இருக்கும் என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
பயங்கரவாதம் என்பதைத் தனது கொள்கையின் ஒரு பகுதியாகப் பாகிஸ்தான் மாற்றிவிட்டது என்றும் அங்கு ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை என்றும் திரு ராஜ்நாத்சிங் குற்றஞ்சாட்டினார்.
‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது, பயங்கரவாதிகளையும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் அரசுகளையும் தனித்தனியாகப் பார்க்க முடியாது என்பதை இந்தியா தெளிவுபடுத்திவிட்டதாகக் குறிப்பிட்ட இந்தியத் தற்காப்பு அமைச்சர், எல்லை தாண்டிய ஊடுருவல் போன்ற தொடர் அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாடு விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


