புதுடெல்லி: அமெரிக்காவிலிருந்து கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 388 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மக்களவையில் மத்திய அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.
“கடந்த பிப்ரவரி மாதம் 333 பேர் நேரடியாக மூன்று ராணுவ விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வணிக விமானங்கள் மூலம் பனாமா நாடு வழியாக 55 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியது,” என்று கீர்த்தி வரதன் சிங் குறிப்பிட்டார்.
மேலும் 295 இந்தியர்கள் அமெரிக்க அரசாங்கத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் அதிபராக டோனல்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அதன்பின்னர் அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறிந்து அவர்களை நாடு கடத்தும் பணியை டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக மெக்சிகோ, கனடா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியதாகக் கூறி அவர்களை அமெரிக்க அரசு நாடு கடத்தி வருகிறது. அந்த வகையில், இந்தியர்கள் பலர் அமெரிக்க ராணுவ விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர்.

