புதுடெல்லி: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தின் சினோ ஹில்ஸ் பகுதியில், பாப்ஸ் அமைப்பு சார்பில் நிர்வகிக்கப்படும் சுவாமி நாராயணன் கோவில்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்தக் கோயிலின் வாயிற்கதவில் தகாத வார்த்தைகளால் கிறுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் வாழும் இந்து மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்காவில் இயங்கும் பாப்ஸ் அமைப்பு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், “இந்த முறை கலிஃபோர்னியாவின் சினோ ஹில்ஸ் பகுதியில் உள்ள இன்னொரு கோவில் அவமதிக்கப்பட்டுள்ளது. வெறுப்பை வேரூன்ற விடாமல் தடுக்க சினோ ஹில்ஸ் மற்றும் தெற்கு கலிஃபோர்னியாவில் உள்ள சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவோம். அமைதியும் இரக்கமும் நிலவுவதை நமது மனிதநேயமும் நம்பிக்கையும் உறுதிசெய்யும்,” என கூறப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் இதுவரையில் 10 இந்துக் கோவில்கள் தாக்கப்பட்டிருப்பதாக வட அமெரிக்க இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சினோ ஹில்ஸ் இந்துக் கோவில் மீதான தாக்குதலை இந்தியா வன்மையாகக் கண்டித்துள்ளது.
தாக்குதலுக்குக் காரணமானோர்மீது உள்ளூர் நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு போதுமான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்றும் இந்திய வெளியுறவுத்துறைப் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வலியுறுத்தியுள்ளார்.