புதுடெல்லி: அமெரிக்காவின் ரூ.182 கோடி நிதி குறித்த உண்மைகள் வெளிவரும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பான நிதியுதவியில் அமெரிக்க அனைத்துலக மேம்பாட்டு நிறுவனத்தின் (USAID) ஈடுபாடு குறித்த தகவல்கள் ‘கவலைக்குரியவை’ என்று ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
நல்ல எண்ணத்துடன் நடவடிக்கைகளைச் செய்வதற்காக USAID இந்தியாவிற்குள் அனுமதிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய ஜெய்சங்கர், அமெரிக்க நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட தகவல்களை ஆராய வேண்டிய அவசியம் உள்ளது என்றார்.
இந்தியாவில் தேர்தலின்போது வாக்கு விழுக்காட்டை அதிகரிக்க USAID அமைப்பு மூலம் 2012 முதல் வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படும் 21 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.182 கோடி) நிதியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது.
இந்தியாவிடம் நிறைய பணம் உள்ளது என்றும் யாரையோ தேர்தலில் வெற்றிபெற வைப்பதற்காக முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் முயற்சி செய்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரத்தை கையில் எடுத்த பாஜக, காங்கிரசை விமர்சித்து வருகிறது. இதுதொடர்பாக விசாரணை தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், அமெரிக்காவிடம் நிதி பெறும் எந்த ஒப்பந்தமும் போடவில்லை என 2010 முதல் 2012 வரை தேர்தல் ஆணையராக இருந்த குரேஷி மறுத்துள்ளார்.
இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
டெல்லி பல்கலைக்கழக இலக்கிய நிகழ்ச்சியில் சனிக்கிழமை (பிப்ரவரி 22) ஜெய்சங்கர் கலந்துகொண்டு பேசியபோது, அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தினரால் வெளியிடப்பட்ட சில தகவல்கள் கவலைக்குரிய ஒன்றாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
“ஒரு அரசாங்கமாக, நாங்கள் அது குறித்து ஆராய்ந்து வருகிறோம். உண்மைகள் வெளிவரும் என்று நான் கருதுகிறேன். USAID இங்கு நல்லெண்ணத்துடன், நல்லெண்ண நடவடிக்கைகளைச் செய்வதற்காக அனுமதிக்கப்பட்டது.
“இப்போது அமெரிக்காவிலிருந்து தீய நோக்கத்துடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இது கவலையளிப்பதாக உள்ளது. அதில் யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது விரைவில் தெரியவரும்,” என்று தெரிவித்துள்ளார்.