புதுடெல்லி: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருள்களுக்கு 100% வரிவிதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபரின் அறிவிப்பால் ஏற்படக்கூடிய தாக்கத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், புதிய வரிவிதிப்பு குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சு, உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.
மேலும், அமெரிக்காவின் புதிய உத்தரவால் இந்தியா பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்றார் அவர்.
“இந்தப் புதிய வரி விதிப்பு, அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் காப்புரிமை பெற்ற பிராண்டட் மருந்துப் பொருள்கள் தயாரிப்புகளுக்குத்தான் பொருந்தும். இந்தியா அமெரிக்காவுக்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மருந்தை ஏற்றுமதி செய்கிறது. எனவே, இந்தியாவுக்குப் பாதிப்பு ஏற்படாது,” என்றார் ரந்தீர் ஜெய்ஸ்வால்.
நாடு கடத்தப்பட்ட 2,417 இந்தியர்கள்
இதனிடையே, கடந்த ஜனவரி முதல் இதுவரை அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
“எந்தவொரு நாட்டிலும் சட்டபூர்வ அந்தஸ்து இல்லாத ஒருவர் இருந்தால், எங்களிடம் பரிந்துரைக்கப்படும் போதெல்லாம், இந்திய குடிமகன் என்று உறுதி செய்யப்பட்டால் மீண்டும் தாயகம் அழைத்து வர அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். இது தான் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்படும் விஷயத்திலும் நடந்து வருகிறது.
“இந்தியாவில் இருந்து சட்டபூர்வ இடப்பெயர்வை ஆதரிக்கிறோம். விசா வழங்குவது ஒரு இறையாண்மை செயல்பாடு என்பதை நாங்கள் கவனிக்கிறோம். ஆனால் இந்திய மாணவர்களின் விண்ணப்பம் தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும் என்றும் அவர்கள் உரிய நேரத்தில் தங்கள் கல்வித் திட்டங்களில் சேர முடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம்,” என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் மேலும் கூறியுள்ளார்.