புதுடெல்லி: கைப்பேசி எண்களை வெளிப்படுத்தாமல் பயனர்கள் தங்களின் தனிப்பட்ட பெயர்களைக் (Usernames) கொண்டு செய்திகளை அனுப்ப அனுமதிக்கும் அம்சம் குறித்து தகுந்த விளக்கமளிக்குமாறு டெலிகிராம், சிக்னல் ஆகிய குறுஞ்செய்திச் செயலித் தளங்களுக்கு இந்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
கடந்த 2025 ஜூன் மாதம் டெலிகிராம் செயலியைத் தற்காலிகமாக முடக்கிய இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சு, தற்போது இணையத்தளங்களின் தனிப்பட்ட தயாரிப்பு அம்சங்களைக் கண்காணிக்கும் வகையில் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
கைப்பேசி எண் இல்லாமல் பயனர் பெயரைக் கொண்டு கணக்கு வைத்துக்கொள்ளும் வசதியால், ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளிலிருந்து பயனர்களை எவ்வாறு பாதுகாக்கப் போகிறீர்கள் என விளக்கம் கேட்டு இந்திய அரசு வியாழக்கிழமை (ஜூலை 2) கடிதம் அனுப்பியிருக்கிறது.
முன்னதாக, அத்தகைய அம்சத்தைக் கொண்டுவர வாட்ஸ்அப் செயலிக்கும் புதன்கிழமை தடை விதித்த அமைச்சு, மூன்று நாள்களுக்குள் விளக்கம் தராவிடில் ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தது.
பயனர் பெயரைப் பயன்படுத்துவதன்மூலம் மறைந்து செயல்படக்கூடிய தன்மை, இணையவழி மோசடிகள், தூண்டுகளவு, மின்னிலக்கக் கைது (Digital Arrest) போன்ற குற்றங்கள் அதிகரிக்கக்கூடும் என இந்திய அரசு அஞ்சுகிறது.
ஏற்கெனவே, உள்ளடக்கங்களை நீக்குவது தொடர்பில் எக்ஸ் தளத்துடன் முரண்பட்டிருந்த இந்திய அரசு, தற்பொழுது சமூக ஊடகங்களுக்கான விதிகளை மேலும் கடுமையாக்கியுள்ளது.
இதற்கிடையே, செய்தியாளர்களும் சமூக ஆர்வலர்களும் அதிகம் பயன்படுத்தும் சிக்னல் செயலிக்கு விளக்கம் கேட்டு அனுப்பப்பட்டுள்ள கடிதம், மக்களின் பேச்சுரிமையைப் பாதிக்கும் செயல் என ‘இணையச் சுதந்திர அறநிறுவனம்’ என்ற மின்னிலக்க உரிமைக் குழு கவலை தெரிவித்துள்ளது.
மேலும், விளக்கம் கேட்டு அனுப்பியுள்ள கடிதங்களை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் அக்குழு வலியுறுத்தியுள்ளது.

