பிரயாக்ராஜ்: உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பம்ராவ்லி விமானத் தளத்திலிருந்து, இந்திய விமானப்படையைச் சேர்ந்த பயிற்சி விமானம் ஒன்று இன்று (ஜனவரி 21) வழக்கம்போல் பயிற்சிக்காகப் புறப்பட்டது.
இவ்விமானத்தில் தலைமை விமானி பிரவீன் அகர்வால், சுனில் பாண்டே ஆகிய இரண்டு விமானிகள் பயணம் செய்தனர்.
ராம்பாக் பகுதி அருகே விமானம் சென்று கொண்டிருந்தபோது, நண்பகல் 12.30 மணியளவில் விமானம் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்தது. அதனையடுத்து, நீர்த்தாவரங்கள் அடர்ந்து காணப்பட்ட ஒரு குளத்திற்குள் அந்த விமானம் விழுந்தது.
விபத்து நடப்பதற்குச் சில நொடிகள் முன்பாகவே, அவசரகால ‘வான்குடை’ உதவியுடன் விமானிகள் இருவரும் கீழே குதித்து உயிர் தப்பினர்.
விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும், மீட்பு விமானம் மூலம் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று இருவரையும் மீட்டனர். விமானிகள் இருவரும் தற்போது நலமாக உள்ளனர்.
இயந்திரக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

