லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2025ஆம் ஆண்டு 2,739 முறை என்கவுன்டர் என்னும் குற்ற முறியடிப்பு நடவடிக்கையைக் காவல்துறை மேற்கொண்டதாகவும் அவற்றில் 48 முக்கியக் குற்றவாளிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பதையே இது உணர்த்துவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த பிறகு, என்கவுன்டர் நடவடிக்கை மூலம் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
அது தொடர்பாக மாநிலக் காவல் துறை இயக்குநர் ராஜீவ் கிருஷ்ணா செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், “உ.த்தரப் பிரதேசத்தில் 2025ஆம் ஆண்டில் மட்டும் 2,739 என்கவுன்டர்களை காவல்துறை நடத்தி உள்ளது. இவை அனைத்தும் சட்டத்துக்கு உட்பட்டு நடத்தப்பட்டன. அந்த நடவடிக்கைகளின்போது 3,153 குற்றவாளிகள் காயமடைந்தனர். ஒரு காவலர் வீரமரணம் அடைந்தார்.
“மாநிலம் முழுவதும் 48 முக்கியக் குற்றவாளிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்ற பின்னர், 2018 முதல் எட்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இதுவே அதிக எண்ணிக்கை ஆகும்.
“கடந்த 2017 மார்ச் 20ஆம் தேதி தொடங்கி 2025 டிசம்பர் 29ஆம் தேதி வரை மொத்தம் 266 குற்றவாளிகள் என்கவுன்டர்களில் கொல்லப்பட்டனர்.
2018ஆம் ஆண்டு 41 பேரும், 2019ல் 34 பேரும், 2020 மற்றும் 2021ல் தலா 26 குற்றவாளிகளும் என்கவுன்டர்களில் கொல்லப்பட்டனர்.
“2025ஆம் ஆண்டு சட்டவிரோத மத மாற்றம் தொடர்பாக 475 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 855 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
“பசு கடத்தல் மற்றும் பசுவதைக்கு எதிராக 1,197 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3,128 பேர் கைது செய்யப்பட்டனர். குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் 1,886 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.7.38 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
“திருட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகளில் 8,543 இருசக்கர வாகனங்கள், 911 நான்கு சக்கர வாகனங்களைக் காவல்துறை மீட்டுள்ளது,” என்று ராஜீவ் கிருஷ்ணா தெரிவித்தார்.

