புதுடெல்லி: கடந்த 11 நாள்களில் வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் ‘சிஎன்ஜி’ எரிவாயுவின் விலை, நான்காவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் விலை செவ்வாய்க்கிழமை (மே 26), ஐந்தாவது முறையாக உயர்த்தப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த மே 15ஆம் தேதி முதல் எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கலன், ‘சிஎன்ஜி’ எரிவாயு ஆகியவற்றின் விலை, அனைத்துலக கச்சா எண்ணெய் சந்தை நிலவரத்துக்கேற்ப இந்தியப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால் உயர்த்தப்பட்டு வருகிறது.
தற்போது சென்னையில் ஒரு கிலோ ‘சிஎன்ஜி’ எரிவாயுவின் விலை இரண்டு ரூபாய் உயர்ந்து, ரூ. 93.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 11 நாள்களில் மட்டும் ‘சிஎன்ஜி’ எரிவாயுவின் விலை, கிலோவுக்கு ஏழு ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் வாடகைக் கார் ஓட்டுநர்கள், ஆட்டோ பயனாளர்கள், விலையுயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாள்களாக எரிவாயு கட்டுப்பாடு நிலவியதால் ‘சிஎன்ஜி’ விநியோகம் இன்றி மக்கள் தவித்த நிலையில், தற்போது தொடர் விலை உயர்வு அவர்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தி உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, பெட்ரோல் விலை ஐந்தாவது முறையாக லிட்டருக்கு 26 காசு அதிகரிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு செவ்வாய்க்கிழமை காலை வெளியானது.

