புதுடெல்லி: துணை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரான சுதர்சன் ரெட்டி இன்று (ஆகஸ்ட் 21) வேட்புமனு தாக்கல் செய்தார்.
இவர், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவார்.
காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின பிரமுகர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பு பேசிய சுதர்சன் ரெட்டி, “போதிய எண்ணிக்கை உள்ளதா என்ற கேள்வி தொடர்கிறது. எனினும், நம்பிக்கை உள்ளது. நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன். எனவே, அனைவரும் எனக்கு ஆதரவு அளிக்க முடியும் என நம்புகிறேன். நேற்றே (புதன்கிழமை) ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிட்டேன். இது ஒரு சித்தாந்தப் போர்,” என்று தெரிவித்திருந்தார்.
துணை அதிபர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. 21ஆம் தேதிக்குள் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். மனுக்கள் பரிசீலனை 22ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஆகஸ்ட் 25ஆம் தேதி கடைசி நாள்.
ஒரு வேட்பாளரை குறைந்தபட்சம் 20 எம்.பி.க்கள் முன்மொழிய வேண்டும். மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும்.
இத்தேர்தலில் 782 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தலில் வெற்றி பெற 50 விழுக்காடு எம்.பி.க்களின் ஆதரவு தேவை. இதன்படி, 391 எம்.பி.க்களின் ஆதரவை பெறும் வேட்பாளர், புதிய துணை அதிபர் பதவிக்குத் தேர்வு ஆவார்.
நாடாளுமன்றத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 422 எம்.பி.க்களும், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணிக்கு 312 எம்.பி.க்களும் உள்ளனர். ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெரும்பான்மை பலம் இருப்பதால், அந்தக் கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி அடைவாரென பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.