புதுடெல்லி: துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் புதன்கிழமை (ஆகஸ்ட் 20) வேட்புமனு தாக்கல் செய்தார்.
நாட்டின் 14 வது துணை அதிபர் ஜகதீப் தன்கரின் பதவிக்காலம் 2027 ஆகஸ்ட் 10ஆம் தேதி நிறைவடைய இருந்த நிலையில், உடல்நலத்தைக் காரணம் காட்டி சென்ற மாதம் 21ஆம் தேதி தமது பதவியிலிருந்து விலகினார்.
அதனையடுத்து அந்தப் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டு, செப்டம்பர் 9ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
வேட்புமனு தாக்கல் செய்ய வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் புதன்கிழமை (ஆகஸ்ட் 20) காலை வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனு நான்கு தொகுப்புகளாக தாக்கல் செய்யப்பட்டது. அதில், 20 முன்மொழிபவர்கள் மற்றும் 20 வழிமொழிபவர்கள் கையொப்பமிட்டிருந்தனர். அதில், பிரதமர் மோடியின் பெயரைத் தவிர, மத்திய அமைச்சர்கள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
வேட்பு மனுத் தாக்கல் நிகழ்வில் பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் மற்றும் மத்திய சுகாதார அமைச்சர் ஜெபி. நட்டா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பல மூத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.