பிலிபிட் (உத்தரப் பிரதேசம்): புலியிடமிருந்து தன்னுயிரைக் காத்துக்கொள்ள கரடி ஒன்று தப்பியோடும் காணொளி இணையத்தில் பரவலாகி வருகிறது.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள பிலிபிட் காட்டுயிர்ப் பாதுகாப்புப் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
காட்டுயிர்ப் புகைப்படக் கலைஞர் சித்தார்த் சிங் பதிவுசெய்த இந்தக் காணொளியை இந்திய வனத்துறை அதிகாரி ரமேஷ் பாண்டே தமது எக்ஸ் (முன்னர் டுவிட்டர்) ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், புலியொன்று கரடியை விரட்டுவதும் சுற்றுப்பயணிகள் தங்கள் வாகனங்களில் இருந்தபடி அச்சத்துடன் அதனைக் காண்பதும் பதிவாகியுள்ளது.
“காடுகள் ஒருபோதும் நமக்கு வியப்பூட்டுவதை நிறுத்துவதில்லை,” என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார் ரமேஷ் பாண்டே.
அவ்வகையில், பல்லாயிரக்கணக்கான இணையவாசிகள் இக்காணொளியைக் கண்டு, தங்கள் வியப்பை வெளிக்காட்டி வருகின்றனர்.
அவர்களில் ஒருவர், “உண்மையான ‘ஜங்கிள் புக்’ இங்கேதான் இருக்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.