பரேலி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் மின்மாற்றி (transformer) ஒன்று திருட்டு போனதால் அங்குள்ள கிராமம் 20 நாள்களாக இருளில் மூழ்கி உள்ளது.
புதான் மாவட்டத்தில் உள்ள சோரஹா கிராமத்தில் வசிக்கும் 5,000 பேரும் இருட்டிலேயே வாழ்கின்றனர். கடும் குளிர் ஒருபக்கம் வாட்டுகிற நிலையில் அந்தக் கிராமத்தில் திரும்பிய பக்கமெல்லாம் இருட்டு.
மின்மாற்றியில் இருந்த செப்புக் கம்பிகள் உட்பட மின்சாரப் பாகங்கள் திருட்டு போனது டிசம்பர் 14ஆம் தேதி தெரிய வந்தது.
அது குறித்து கிராம மக்கள் உகைதி காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்னரும், வேறு மின்மாற்றி அங்கு நிறுவப்படவில்லை. விசாரணை மட்டும் தொடர்கிறது.
மின்சாரம் இல்லாததால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக கிராமத் தலைவர் சத்பால் சிங் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’விடம் தெரிவித்தார்.
அடுத்த மாதம் அரசுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் கைப்பேசிகளும் பயனற்றுப் போயின.
விவசாயிகளும் பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேசத்தில் குளிர்காலத்தில் மின்சார பாகத் திருட்டுகள் அதிகமாக நிகழ்வது வழக்கம்.

