சத்தீஸ்கர்: இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பைகமார் எனும் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 22) நச்சுப் பாம்பு கடித்ததால் 22 வயது இளையர் ஒருவர் மாண்டார்.
அதைத் தொடர்ந்து அந்த ஊர் மக்கள் இளையரின் உடலை எரித்த சிதையில் அந்தப் பாம்பை உயிருடன் போட்டு எரித்ததாக ஊடகங்கள் கூறுகின்றன.
மேலும் யாரையேனும் அப்பாம்பு கடிக்கக்கூடும் என்று அஞ்சியதாக ஊர்மக்களில் சிலர் கூறினர்.
சனிக்கிழமை இரவு, உறங்குவதற்காகத் தன் வீட்டில் படுக்கையை விரித்த திகேஷ்வர் ரதியா எனும் இளையரைக் கட்டு விரியன் வகைப் பாம்பு கடித்ததாகக் கூறப்படுகிறது.
குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். சிகிச்சை பலனளிக்காமல் அவர் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார்.
இதற்கிடையே ரதியாவைக் கடித்த பாம்பைப் பிடித்த ஊர்க்காரர்கள் அதைக் கூடையில் அடைத்து வைத்தனர்.
பின்னர் ரதியாவின் உடலுக்கு எரியூட்ட எடுத்துச் என்றபோது அந்தப் பாம்பையும் கயிற்றில் கட்டி இழுத்துச் சென்றனர். பின்னர் ரதியாவின் உடலுக்கு எரியூட்டிய அதே சிதையில் பாம்பையும் உயிரோடு வீசி எரித்தனர்.
சம்பவம் குறித்துக் கூறிய காவல்துறை, ஊர்மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்று கூறியது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும் அவர்களுக்குப் பாம்புகள் குறித்தும் பாம்பு கடித்தால் என்ன செய்யவேண்டும் என்பது குறித்தும் கல்வி புகட்ட வேண்டியதன் தேவையை அதிகாரிகள் வலியுறுத்தினர்.

