புதுடெல்லி: மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற மோசடிகள் குறித்து கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு தரவுகளுடன் குற்றம் சாட்டியிருந்தார்.
பாஜகவுடன் சேர்ந்துகொண்டு தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாகவும் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து 25 கட்சியினருடன் இணைந்து பேரணி நடத்திவருகிறார்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு போலியானது என்று பாஜக கூறியுள்ளது. இது தொடர்பாக பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான், “வாக்குத் திருட்டு என்பது தவறானது. ராகுல் காந்தியின் வாக்கு வங்கி அரசியல் அம்பலமாகியுள்ளது,” என்றார்.
அதேபோல, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத் கூறும் போது, “எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு ஏதேனும் வலு உள்ளதா? தனி மனிதரோ , கட்சியோ இதுவரை எந்தக் குறையும் சொல்லவில்லை என்று எதிர்க்கட்சி விளக்கம் அளித்துள்ளது,” என்று கூறினார்.