தாய்லாந்து செல்லும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை

தாய்லாந்து செல்லும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை

2 mins read
703d6e9d-bea4-491a-a80b-c09a952ca564
நல்ல பயண முகவர்களை அணுகி நல்ல பயணத்திட்டங்களுடன் தாய்லாந்துக்கு வருமாறு பட்டாயா காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. - படம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

புதுடெல்லி: தாய்லாந்துக்குச் சுற்றுலா சென்ற மூன்று இந்தியர்கள், அங்கு சிலரால் கடத்தப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

எனவே, தாய்லாந்து செல்லும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனத் தமிழக ஊடகங்கள் அறிவுறுத்தியுள்ளன.

கடத்தப்பட்ட மூன்று இந்தியர்களும் தாய்லாந்து சுற்றுலாவிற்கு ஏறக்குறைய இரண்டு லட்சம் ரூபாய் செலுத்தியதாகவும் கடந்த ஜூலை 21ஆம் தேதி பேங்காக்கில் உள்ள சுவர்ண பூமி விமான நிலையத்தைச் சென்றடைந்ததாகவும் தெரிகிறது.

பின்னர் மூவரிடமும் தங்களைச் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட இருவர், அவர்களை விமான நிலையத்தில் இருந்து காரில் பட்டாயாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அதையடுத்து, இருசக்கர வாகனத்தில் பாங்கு லாமுங் என்ற பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு மூவரையும் கட்டிப்போட்டு சித்திரவதை செய்யத் தொடங்கியதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மூவரிடமும் எழுபது லட்சம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே விடுவிப்போம் என்று மிரட்டிய கடத்தல்காரர்கள், இந்திய இளையர்களின் குடும்பத்தாரைக் கைப்பேசி காணொளி அழைப்பின்மூலம் தொடர்புகொண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் அந்தக் காணொளி அழைப்பை, கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தார்களில் ஒருவர் தமது கைப்பேசியில் பதிவு செய்துள்ளார். பின்னர் காணொளி ஆதாரத்துடன் தாய்லாந்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில், விரைவாக நடவடிக்கை மேற்கொண்ட தாய்லாந்து காவல்துறையினர் மூன்று பேரையும் மீட்டனர்.

கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஐந்து இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கடத்தல் திட்டத்தின் மூளையாகச் செயல்பட்ட பாகிஸ்தான் ஆடவர் ஒருவர் மீதும் வழக்கு பதிவாகியுள்ளது. அவர் தேடப்பட்டு வருகிறார்.

இதனிடையே, தங்களைக் கடத்திச் சென்ற கும்பலைச் சேர்ந்தவர்கள் ஒருவார காலம் ஒரு வீட்டில் அடைத்து வைத்து, அடித்து உதைத்து சித்திரவதை செய்ததாகக் கடத்தப்பட்ட இந்திய இளையர்கள் மூவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

“எங்களுக்கு உணவு வழங்கப்படவில்லை, கழிவறை செல்லவும் அனுமதிக்கவில்லை‌. அவ்வப்போது தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு சரமாரியாக அடித்தனர்,” என்று இளையர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து நல்ல பயண முகவர்களை அணுகி நல்ல பயணத்திட்டங்களுடன் தாய்லாந்துக்கு வருமாறு பட்டாயா காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
தாய்லாந்துசுற்றுலாப் பயணிகள்காவல்துறைகடத்தல்மீட்பு