புதுடெல்லி: ஈரானுக்கு ஆதரவாகத் தீவிரவாதச் சித்தாந்தங்களைப் போதனை செய்யும் சமயப் போதகர்கள் குறித்து மாநிலங்கள் அனைத்தும் உச்சவிழிப்புநிலையில் இருக்கும்படி இந்திய உள்துறை அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான்மீது நடத்திய தாக்குதலை அடுத்து சினத்தைத் தூண்டும் வகையிலான போதனைகள் பரவக்கூடும் என்று அமைச்சு எச்சரித்தது.
பிப்ரவரி 28ஆம் தேதி மாநிலங்களுக்கும் அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பிவைத்தது.
தீவிரவாதிகளும் அனைத்துலகப் பயங்கரவாதக் குழுக்களும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வெறுப்பைத் தூண்டக்கூடும் என்று சுற்றறிக்கை குறிப்பிட்டது.
சட்ட, ஒழுங்கு பிரச்சினை தலைதூக்காமல் இருப்பதைப் பார்த்துக்கொள்ள விழிப்புநிலையையும் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தும்படி அமைச்சு மாநிலங்களை அறிவுறுத்தியது.
அனைத்துலக நிகழ்வுகள் உள்நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அது சுட்டியது.
இணைத் தூதரகங்கள், தூதரகங்கள், அமெரிக்காவிலும் இஸ்ரேலிலும் உள்ள இருதரப்பு அலுவலகங்கள், இருநாட்டுக்கும் பொதுவான அமைப்புகள் ஆகியவற்றில் அமைதியை நிலைநாட்ட பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும்படியும் இந்திய உள்துறை அமைச்சு மாநிலங்களைக் கேட்டுக்கொண்டது.

