வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் அண்மையில் நிகழ்ந்த நிலச்சரிவிலிருந்து மேலும் நால்வரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதை அடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) வயநாடு மாவட்டத்திலுள்ள மேப்பாடியில் தனியாா் நிறுவனத்தின் சுரங்கம் தோண்டும் பணி நடைபெறும் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
அதில் சிக்கிய மூவர் உயிரிழந்ததோடு 10 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஐவரைக் காணாததை அடுத்து அவர்களைத் தேடும் பணி மூன்றாவது நாளாக நடைபெற்றது.
தீயணைப்புப் படையினரும், தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும் மோப்ப நாய்களின் துணையுடன் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட மலைப் பகுதிக்குக் கீழே உள்ள ஆற்றுப் பகுதியிலும் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை (ஜூலை 9) காலை இடிபாடுகளிலிருந்து நால்வரின் உடல்கள் மீட்கப்பட்டன.
அவர்களில் மூவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அசாருதின் அன்சாரி, பொறியாளராக வேலை செய்து வந்த இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ராகுல் சர்மா, பீகாரைச் சேர்ந்த முகம்மது இம்ரான் என அடையாளம் காணப்பட்டது. இன்னொருவர் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
இதற்கிடையே, காயமடைந்த 10 பேரில் மூவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டனர். நால்வர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அதனால் மரண எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

