கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்து வருகின்றன.
இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் ஒரே நாளில் 10 குழந்தைகள் இறந்துள்ளன. மாதத்தின் முதல் மூன்று வாரத்தில் மட்டும் 60 குழந்தைகள் இறந்துள்ளன.
அவற்றில் 44 குழந்தைகள் பிற மருத்துவமனைகளில் பிறந்து, பின்னர் ஆபத்தான நிலையில் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டவர்கள் ஆவர்.
மீதமுள்ள 16 குழந்தைகள் மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து இறந்தனர்.
இதையடுத்து மாநில சுகாதாரத்துறை இது குறித்து முறையாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
மால்டா அரசு மருத்துவக் கல்லூரியில் பிறந்த குழந்தைகள், பிற மருத்துவமனையில் பிறந்து மால்டா அரசு மருத்துவமனைக்குக் குழந்தைகளை அனுப்பிய மருத்துவமனைகளை முழுமையாக ஆய்வு செய்ய மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மால்டா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பிரசென்ஜித் செய்தியாளர்களிடம் பேசினார்.
‘’ஒரே நாளில் இறந்த 10 குழந்தைகளில் எட்டுக் குழந்தைகள் வெளியிலிருந்து மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டவை. இரண்டு மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்தன. குறைவான பிறப்பு எடை, மூச்சுத்திணறல், மஞ்சள் காமாலை மற்றும் இதயம் தொடர்பான வியாதிகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பிரச்சினைகளால் இந்த இறப்புகள் ஏற்பட்டன,” என்று தெரிவித்தார்.


