கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்ரல் 23) நடைபெற உள்ளது.
தமிழகத்தைப் போலவே மேற்கு வங்கத்திலும் செவ்வாய்க்கிழமை மாலையுடன் பிரசார நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன.
மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் 152 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மீதமுள்ள தொகுதிகளுக்கு ஏப்ரல் 29ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டத் தேர்தலில் மொத்தம் 1,478 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 3.60 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர்.
இம்முறை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.
மேற்கு வங்கத் தேர்தலில் எப்போதுமே வன்முறைச் சம்பவங்களுக்குக் குறைவிருக்காது. அந்த வகையில், இம்முறையும் பல்வேறு இடங்களில் மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன.
இதைக் கவனத்தில் கொண்ட தேர்தல் ஆணையம், முதற்கட்டத் தேர்தலில் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 2.4 லட்சம் வீரர்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தி உள்ளது.
தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் தொகுதிகளில் ஏப்ரல் 22 மாலை 6 மணி முதல் 23ஆம் தேதி காலை 6 மணி வரை இருசக்கர வாகனங்களின் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
‘ஐ-பேக்’ நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை
இதனிடையே, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் பிரசார ஆலோசனைகளை வழங்கி வரும் ‘ஐ-பேக்’ நிறுவனத்தின் கோல்கத்தா அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதையடுத்து, அடுத்த 20 நாள்களுக்கு அனைத்துப் பணிகளையும் நிறுத்தி வைக்குமாறு தனது ஊழியர்களுக்கு அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் முதல்வர் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரசார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் ‘ஐ-பேக்’ ஊழியர்கள் வேலையிழக்க மாட்டார்கள் என்றும் அனைவருக்கும் தங்கள் கட்சி சார்பாக ஊதியம் வழங்கப்படும் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அமித்ஷா உறுதிமொழி
இதனிடையே, மேற்கு வங்கத்தில் இறுதிகட்டப் பிரசாரத்தில் அனல் பறந்தது. மத்தியில் உள்ள பாஜக அரசை முதல்வர் மம்தா கடுமையாக விமர்சித்தார்.
சிலிகுரி பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்கத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ளதாகச் சாடினார்.
பாஜக ஆட்சிக்கு வந்தால், இத்தகைய ஊடுருவல்கள் தடுத்து நிறுத்தப்படும் என்றும் ஊடுருவல்காரர்கள் இல்லாத மாநிலமாக மேற்கு வங்கம் மாற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

