ஆக்ரா: காரில் சென்றபோது ஓட்டுநர் தலைக்கவசம் அணியவில்லை என்று ஆக்ரா காவல்துறை அபராதம் விதித்தது சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
இச்சம்பவத்தை அடுத்து குல்ஷன் குமார் என்ற அந்த ஆசிரியர் இப்போதெல்லாம் கார் ஓட்டும்போது தலைக்கவசம் அணிகிறார்.
கடந்த நவம்பர் 26ஆம் தேதியன்று குல்ஷன் குமார் தனது காரை ஓட்டிச் சென்றபோது பரபரப்பான சாலை ஒன்றில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
பின்னர் போக்குவரத்துக் காவல்துறையினர் அவரிடம் ஏன் தலைக்கவசம் அணியவில்லை எனக் கேட்க, கடும் அதிர்ச்சியடைந்தார் குல்ஷன் குமார். இதையடுத்து அவருக்கு ரூ.1,100 அபராதம் விதிக்கப்பட்டது. தனது இந்த அனுபவம் குறித்து காணொளி வெளியிட்டுள்ளார் குல்ஷன் குமார்.
அதில் தாம் காரில் இருக்கைப்பட்டை அணிந்து இருந்ததாகவும் ஆனால் போக்குவரத்து காவல் அதிகாரிகளோ ஏன் தலைக்கவசம் அணியவில்லை என்று கேட்டு அபராதம் விதித்ததாகவும் கூறியுள்ளார்.
தாம் எப்போதுமே சட்ட, விதிமுறைகளுக்கு கட்டுப்பட்ட குடிமகன் என்பதால் இனி கார் ஓட்டும் போதெல்லாம் தலைக்கவசம் அணியப்போவதாக குல்ஷன் குமார் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.
மோட்டார் வாகன சட்டப்படி இருசக்கர வாகனமோட்டிகளுக்கு மட்டுமே தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


