ராய்ப்பூர்: எந்தவொரு உலகளாவிய நெருக்கடியிலும் இந்தியா எப்போதும் தீர்வு காண முன் நிற்கிறது என பிரதமர் மோடி கூறினார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், உலகில் எங்கு நெருக்கடி ஏற்பட்டாலும், இந்தியா உதவிகளை வழங்கத் தவறியதில்லை என்றார்.
“ஒரு பேரழிவு ஏற்படும் போதெல்லாம், இந்தியா உதவிகள் வழங்குவதில் நம்பகமான கூட்டாளியாக இருக்கிறது. இதற்கு இந்தியா தயங்கியதில்லை,” என்றார் பிரதமர் மோடி.
மாநிலங்களின் வளர்ச்சி மூலம் நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்வதே தமது அரசின் தாரக மந்திரம் என்றும் மாநிலத்தின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் பணியில் எங்கள் அரசு ஈடுபட்டுள்ளது. நான் பல தசாப்தங்களாக உங்கள் அனைவருடனும் தொடர்பில் இருக்கிறேன். நான் இங்கு விருந்தினராக அல்லாமல் உங்களில் ஒருவனாக இருக்கிறேன்,” என்றார் திரு மோடி.
முன்னதாக, ராய்ப்பூரில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவினி மருத்துவமனையில் நடந்த விழாவில், இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும், குழந்தைகளுடன் மோடி கலந்துரையாடினார்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

