ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துக்கு அண்மைக்காலம் சோதனைக் காலமாக மாறியுள்ளது. இவ்வாண்டு நடைபெற்ற ஆஸ்கார் விருது நிகழ்ச்சியில், நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை வில் ஸ்மித் அறைந்த சம்பவம், உலகளவில் பூதாகரமாக வெடித்தது.
தம்முடைய மனைவியை கிண்டல் செய்ததால் தாம் அவ்வாறு நடந்துகொண்டதாகக் கூறிய வில் ஸ்மித், அதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். இருந்தபோதும் அவர் மீது ஆஸ்கார் அகாடமி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், மும்பை விமான நிலையத்தின் தனியார் முனையத்தில் இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 23) வில் ஸ்மித் காணப்பட்டார். அவரை அடையாளம் கண்ட ரசிகர்கள், அவரை புகைப்படம் எடுத்தனர். அவரைக் காட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகி வருகின்றன.
சமய குருக்களுடன் ஆன்மீக சந்திப்புக்காக அவர் இந்தியா சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியப் பாரம்பரியத்தின் மீது அதீத பிரியம் கொண்டுள்ள வில் ஸ்மித், மன நிம்மதிக்காக அங்கு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
வில் ஸ்மித் பலமுறை இந்தியா சென்றிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாரணாசிக்குச் சென்ற அவர், கங்கை நதியில் புனித நீராடினார். அதோடு சாமியார்களையும் அவர் சந்தித்துச் சென்றார். இந்த முறையும் அவர் வாரணாசி செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

