இந்தூர்: பிச்சை எடுத்தே ஒன்றரை மாதத்தில் இரண்டரை லட்ச ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டிய பெண் கைதுசெய்யப்பட்டார்.
இச்சம்பவம் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
இந்திரா பாய் என்ற அப்பெண், தன் எட்டு வயது மகளுடன் இந்தூரில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்ததை லாப நோக்கமற்ற அமைப்பு ஒன்று கண்டுபிடித்தது.
அந்த அமைப்பினர் விசாரித்தபோது, தன் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் இந்தூர் நகரத் தெருக்களில் பிச்சையெடுப்பதாக இந்திரா கூறினார். அவருடைய மற்ற இரு குழந்தைகளும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் வசித்து வருவதாகவும் அவர் சொன்னார்.
பிச்சை எடுத்து வந்த இந்திரா பாய் குடும்பத்தினர், இந்தூரில் ஒரு கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தனர்.
லாப நோக்கமற்ற அமைப்பினர் அங்கு வந்ததும் இந்திரா பாயின் குடும்பத்தினர் அக்கூடாரத்தைவிட்டு ஓடிவிட்டதாக இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது.
இந்திரா பாயை விசாரித்தபோது, ஏழு நாள்களில் மட்டும் 19,000 ரூபாய்க்கும் மேல் அவர் வருமானம் ஈட்டியது தெரியவந்தது.
சராசரியாக நாளொன்றுக்கு ரூ.3,000 சம்பாதித்து வந்த இந்திரா பாய், சொந்த ஊரில் தனக்கு காரை வீடு, மனை, இருசக்கர வாகனம் இருப்பதாகக் கூறினார்.
கடந்த 45 நாள்களில் மட்டும் பிச்சையெடுத்தே அவர் 250,000 ரூபாய்க்கும் மேல் சேர்த்துவிட்டார். அதில் ஒரு லட்ச ரூபாயைத் தன் மாமனார், மாமியாருக்கு அனுப்பிவிட்டார். தன் பெயரிலும் தன் குழந்தையின் பெயரிலும் ஆளுக்கு 50,000 ரூபாயை வங்கிக் கணக்கில் போட்டுவிட்டார்.
இந்தத் தகவல்கள் எல்லாம் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட, பின்னர் இந்திரா பாய் கைதுசெய்யப்பட்டார். அவருடைய எட்டு வயது மகள் குழந்தை நல்வாழ்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார்.